True or Fake?

Thursday 18 August 2016

டத்தோ டி.மோகன் பத்திரிக்கைச்செய்தி! சிலாங்கூர் பக்கத்தான் அரசாங்கத்தின் அராஜகங்கள் தொடர்கதையா?

        இந்திய சமுதாயம்  ஓரங்கட்டப்படுகிறதா?   
டத்தோ  டி.மோகன்  கண்டனம்!
கோலாலம்பூர் ஆக 19– 
இந்திய  சமுதாயத்தை  குறி வைத்து சமீப  காலமாக  சிலாங்கூர் பக்கத்தான்  அரசாங்கம் அடக்குமுறைகளை  கையாண்டு  வருவது  கண்டனத்திற்குரியது.  சமுதாயத்தினர்களின் உணர்ச்சிகளை தூண்டி, அவர்களின்  வாக்குகளால்  ஆட்சிக்கு  வந்தவர்கள், இன்று   அதனை மறந்து  விட்டு   கொடுத்த  வாக்குறுதிகளை மீறி  தொடர்ந்து  இந்தியர்களின்  உணர்வுகளுக்கு  மதிப்பளிக்காமல், தொல்லைகள்  கொடுத்து  வருவதும்,  சிலாங்கூர்  மாநில  மந்திரி பெசார்  அஸ்மின்  அலி  இந்தியர்களின் குரல்வளையை  நெறிக்கும்  வண்ணம்  நடந்து  கொள்ளவதும் நல்லதல்ல  என  மஇகாவின்  உதவித்தலைவர் டத்தோ  டி.மோகன்  தனது  கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய  முன்னணி  ஆட்சிக்காலத்தில்  பாடாங்  ஜாவா  ஆலயம்  உடைக்கப்பட்டதன்  தொடர்பில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமான  இந்தியர்கள் பக்கத்தான்  அரசாங்கத்திற்கு  ஆதரவு கொடுத்ததன் காரணமாகவே  சிலாங்கூர்  மாநிலத்தை  எதிர்கட்சி பிடிக்க  நேரிட்டது. எங்களது  ஆட்சிக்காலத்தில்  ஆலயங்கள்   உடைக்கப்பட மாட்டாது, இந்தியர்களின்  பொருளாதாரத்தை  உயர்த்துவோம்  என மார்தட்டி வெற்று  வாக்குறுதிகளை  அள்ளி வீசியவர்கள் இன்று சிலாங்கூர் மாநிலத்தில்  இந்திய சமுதாயத்தை  மையப்படுத்தி 10-க்கும்  மேற்பட்ட  ஆலயங்களை உடைத்து  தள்ளியது  ஏன்? இந்தியர்களின் கடைகளை உடைத்தது  ஏன்?  இரவுச்சந்தைகள்  முதல் அனைத்திலும் இந்தியர்களுக்கு  வாய்ப்புகள்  மறுக்கப்படுவது  ஏன்?  இந்திய சமுதாய  மேம்பாட்டிற்காக  சிலாங்கூர்  பக்கத்தான்  அரசாங்கம் செய்த  சாதனை  தான் என்ன?  என அவர்  வினவினார். 
சில தினங்களுக்கு  முன்  சிப்பாங்  சுங்கை பீலேக் நாகமாரியம்மன்  ஆலயத்தை  உடைத்து தரைமட்டமாக்க நகராண்மைக்கழக   அதிகாரிகள் முற்பட்டு  ஆலயத்தின் ஒரு பகுதியை  உடைத்த வேளையில், பொதுமக்களோடு  மஇகா மத்திய  செயலவை  உறுப்பினரும், சிப்பாங் மஇகா தொகுதி  தலைவருமான வே.குணாளன் தலையிட்டு  ஆலயத்தின்   சிலைகள் உடைபடாமல்  தடுத்துள்ளார். அது மட்டுமில்லாது சுங்கை  பீலேக்  சட்டமன்ற  உறுப்பினரின்  அனுமதியோடு  இந்த  ஆலய உடைப்பு நிகழ்ந்துள்ளமை  வருத்தம்  அளிக்கிறது.  இதே  வட்டாரத்தில் கம்போங்  புலா மெராந்தியில்  ஒரு ஆலயம் பேச்சுவார்த்தையின்  அடிப்படையில்  உடைபடாமல் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
மலேசிய  திருநாட்டில் பெரும்பாலும்   இந்து ஆலயங்கள் மரத்தடி  ஆலயங்களாகவும், ஆங்காங்கேயும் அமைந்து  பின்னர் நிலம்  வழங்கப்பட்டு பொது ஆலயங்களாக உருவாகி  உள்ள வரலாற்றை  யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. ஆகவே மாற்று இடத்திற்கு  வழிகோணாமல்  அராஜகமான  முறையில் ஆலயங்களை  உடைப்பது இந்தியர்கள் மீது அக்கறையில்லாத  நிலைப்பாட்டை  வெளிப்படுத்துகிறது. 
மேலும் நேற்று முன் தினம் கிள்ளான்  பெர்க்லி  கார்னர் உணவகத்தை 2 வது  முறையாக  உடைக்கும் நோக்கத்திலும், அந்தக்கடையை  காலி செய்யும்   நோக்கத்தோடும்  மிகவும் மோசமான  முறையில்  லோரிகளில் இந்தக்கடையின்  பொருள்களை எல்லாம்   ஏற்றியுள்ளார்கள். இதனை தடுக்க முயன்ற மஇகா இளைஞர்  பகுதி  செயலாளர்  அர்விந்த்கிருஷ்ணன் மற்றும்  பொதுமக்களோடு    வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியர்கள்  வணிகம்  செய்கிறார்கள்  என்ற  நிலைப்பாட்டில்  இந்தக்கடையை  காலி செய்ய  நினைக்கிறார்களா? கடந்த  2014 ஆம் வருடம் டிசம்பர்  மாதம்  11-ம் தேதி  விடியற்காலையில்  இதே  கடையை உடைக்க முற்பட்ட  சம்பவம்  இந்தியர்களிடையே  பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.
இந்தியர்களின்  பொருளாதாரத்தை நசுக்கும் வண்ணம் செயல்பட்டு  விட்டு  பிறகு சமுதாய  பொருளாதார  மேம்பாட்டுக்காக பாடுபடுகிறோம் என்று  சொல்ல முடியுமா? சமுதாயத்தின்  மீதான  அடக்குமுறைகள்   நிறுத்தப்பட  வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு  பக்கத்தான்  இந்தியத்தலைவர்கள்  இந்தியர்கள்  என்ற உணர்வைத்தாங்கி  குரல் கொடுக்க முன் வர  வேண்டும்.  மேலும்  மஇகாவையும், அதன்  நிறுவனங்களையும்  குறை  சொல்லி  அரசியல்  பிழைப்பு நடத்தும்  ஒரு  சில  எதிர்கட்சி  இந்தியத்தலைவர்கள்,  இந்தியர்களின்  மீது  தொடுக்கப்படும் அராஜகங்களை  கண்டுகொள்ளாமல்  இருப்பது  ஏன்?
மஇகாவை  பொறுத்த  வரையில்  சமுதாயத்தின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும், அன்றைய  காலம்  தொட்டு இன்று  வரை குரல் கொடுத்து வருகிறது. சிலாங்கூர்  அரசாங்கத்தின்  அராஜகங்கள் தொடர்ந்தால்  மிகப்பெரிய அளவில்  போராட்டம்  வெடிக்கும்  என  டத்தோ  டி.மோகன் தமதறிக்கையில்  எச்சரிக்கை  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment